சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் திரையரங்கம் மூடப்பட்டு, முற்றிலும் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனைக் தொடர்ந்து, மேலும் இரண்டு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக வெளியான தகவல், சினிமா ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடசென்னையின் தண்டையார்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் இருந்த ஸ்ரீ பிருந்தா திரையரங்கமும் விரைவில் இயங்காது என்று கூறப்படுகிறது.
1985ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஸ்ரீ பிருந்தா திரையரங்கத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கிவைத்தார். அதுமட்டுமின்றி ரசிகர்கள் இந்த திரையரங்கிற்கு அன்போடு "ரஜினி தியேட்டர்" எனப் பெயரிட்டனர். இதற்கு முக்கியமான காரணம், மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடியதுதான்.
ஒருபோதும் குறையாத சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை, தற்போதெல்லாம் மெல்ல மெல்ல தளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பெரிய அளவிலான தனிப்பட்ட திரையரங்குகள் மூடப்படுவதால், ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
Edited by Siva