வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 20 மே 2020 (09:00 IST)

இதே கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்பீர்களா...? தமன்னா காட்டம்!

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், தனுஷ் எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான "தட்ஸ் மகாலட்சுமி" என்ற படத்தை தற்போது கைவசம் வைத்துள்ளார்.

அதையடுத்து தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் புதிய படத்தில் நடிக்க தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த படத்தில் நடிக்க தமன்னா அதிகம் சம்பளம் கேட்டதால் அதை ஒப்புக்கொள்ளாத படக்குழு தமன்னாவை நிராகரித்ததாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி டோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.  இந்நிலையில் தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தமன்னா,  " கடந்த பிப்ரவரி மாதமே படத்தில் நடிப்பது குறித்து தயாரிப்பு தரப்பு என்னை அணுகினார்கள். ஆனால் , துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸால் தயாரிப்பு நிறுவனமே பேச்சு வார்த்தையை நிறுத்தியது.

அதற்குள் இப்படி ஒரு வதந்தியை நான் எதிர்பார்க்கவில்லை.  மேலும், சம்பளம் என்பது அந்தந்த நடிகர் , நடிகையின் தனிப்பட்ட முடிவு.  நடிகரின் மதிப்பையும் அவரது மார்க்கெட்டையும் தீர்மானித்து கொடுக்கும் சம்பளத்தை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் தனிப்பட்ட்ட விஷயம்.  திரைத்துறையில் பெண்களாகிய நாங்களும் கடுமையாக உழைப்பவர்கள் தான். இதே கேள்வியை ஏன் ஒரு நடிகரிடம் கேட்க மறுக்கிறீர்கள்? .ஏன் அதிக சம்பளம் பெற்றவர் என்ற பட்டம் பெண்களுக்குக் கிடைக்கக்கூடாதா? அந்த உரிமை ஆண்களுக்கு மட்டும் தான் உண்டா? என கட்டமாக பேசியுள்ளார்.