வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிருஷ்ண ஜெயந்தி
Written By

பகவான் கிருஷ்ணன் அவதரித்ததின் நோக்கம் என்ன....?

ஆவணிமாதம் அஷ்டமி திதியில் பகவான் கிருஷ்ணன் அவதரித்தார் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டுதோறும், ஆவணி மாதம்  தேய்பிறை அஷ்டமி நன்னாளில் ஜென்மாஷ்டமி தினத்தை இந்துக்கள் கொண்டாடுகின்றனர். 
ஜென்மாஷ்டமி நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். தஹிகலா என்றால் பல தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலும் வெண்ணெயும் கலப்பது என்பர். வரஜபூமியில் கோபியர்களோடு  மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான்.
 
இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு  வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன்  மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து  மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.
 
பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜபூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
 
இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி  விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். தென் மாநிலங்களில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று  அழைக்கப்படுகிறது. தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
 
கிருஷ்ணரின் செயல்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை போல் அவரைக் காட்டினாலும், செயல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளர்த்தமும், வாழ்க்கை உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இதை உணர்ந்தால், மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றிநடைப் பயிலலாம். அமைதியுடனும், மனித நேயத்துடனும் வாழ முடியும். மேலும் ஆனந்தம் என்பது பொருளிலோ, புகழிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை அகத்தில் இருந்து தேடாமல் புறத்தில் இருந்து  தேடுகிறோம்.