1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (16:35 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ்கிற்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா?

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பி இருப்பது கடும் சர்ச்சை செய்திகளை உருவாக்கி வருகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளபதி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழி நடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார்.

இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனோடு ரெய்னாவுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தோனிக்கு கொடுத்தது போன்ற ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது. அதோடு சி எஸ் கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ரெய்னாவின் மீதான தனது கோபத்தையும் பதிவு செய்தார்.  

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இது குறித்து தோனியுடன் எந்த மோதலும் இல்லை எனவும் அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  தன்னை கூடிய விரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்க்கலாம் எனறும் தான் பயிற்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.