வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (09:09 IST)

நான் கோரிக்கை வைக்கவில்லை – மௌனம் உடைத்த டிவில்லியர்ஸ் !

உலகக்கோப்பை அணியில் மீண்டும் இடம்பிடிக்க வாரியத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே 6 போட்டிகளில் தோல்வி அடைந்து  மிக மோசமான லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இல்லாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதி வரை சிறப்பாக வழிநடத்தினார் டிவில்லியர்ஸ்.

ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு அதிர்ச்சியளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலகக் கிரிக்கெட் ரசிகர்களிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் ஐபிஎல் உள்ளிட்ட பல டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் அவர் மேல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது என செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

இந்நிலையில் இது குறித்து டிவில்லியர்ஸ் முதல் முதலாக பதிலளித்துள்ளார். அதில் ‘நான் 2018ஆம் ஆண்டின் மே மாதமே எனது ஓய்வை அறிவித்துவிட்டேன். எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவே நான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் நான் பணத்துக்காக செயல்படுவதாக என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனது ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் அணி நிர்வாகத்துடன் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன். அணித்தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னர் டூபிளசிஸிடம் நட்பு ரீதியாகப் பேசியபோது உலகக் கோப்பை அணியில் நான் ’தேவைப்பட்டால்’ விளையாடுவேன் எனக் கூறினேன். ஆனால் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இதைப் பொதுமைப்படுத்தி விட்டனர். ’ எனக் கூறி தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ளார்.