1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (13:01 IST)

சித்தர்கள் என்பவர்கள் யார்?; சித்தர் வழி எவை?

சித்தர்கள் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள்.
சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு என்றும் சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு என்றும், சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய  அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று  அழைக்கப்பட்டனர்.
 
சித்தர்கள் மீவியற்கை (super natural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள்  உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ,  இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும்  பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய  முயன்றவர்கள் சித்தர்கள். 
 
சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை, உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை  நோக்கி தெளிவான புரிதலை, அறநிலை உணர்வை, மெய்யடைதலை சித்தி எய்தல் எனலாம். மனிதன் முயன்றால், சித்தர் வழி  நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி  நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.