வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஜபம் செய்வதில் இத்தனை வகைகள் உண்டா...?

மந்திர ஜெபம் செய்யும் பொழுது கைகளில் ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்துவது வழக்கம். தாமரை மணிமாலை, ஸ்படிக மணி மாலை போன்றவையும் ஜெபம் செய்ய சிறந்ததாக இருந்து வருகிறது. 

எனவே ஜெபம் செய்வதற்கு கைகளில் பிரத்தியேக ஆன்மீக சம்பந்தப்பட்ட மணி மாலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுவது நல்லது. அதேபோல் ஜெபம் செய்யும்  பொழுது வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. கம்பளித் துணி விரித்துக் கொள்ள வேண்டும் அல்லது தர்பை புல், தர்பை பாய் பயன்படுத்தலாம்.
 
அகண்ட ஜபம்: இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம். மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம், ‘ஜபயக்ஞம்’ என்று அழைக்கப்படுகின்றது.
 
அஜபா ஜபம்: இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
 
ஆதார சக்ரங்களில் ஜபம்: இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.
 
புரஸ்சரணம்: இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.
 
வாசிக ஜபம்: உரக்க வாய்விட்டு ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.
 
உபாம்சு ஜபம்: ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
 
மானஸ ஜபம்: இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.
 
லிகித ஜபம்: புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.
 
சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது, அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று "மனு சம்ஹிதை" என்ற நூல் கூறுகிறது.