வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

இராகு காலம் மற்றும் எம கண்ட நேரங்கள் எப்படி வந்தது தெரியுமா...?

ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் குறைந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் ஆகும்.

இதில் கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த முறை. அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருக்கிறது.
 
இராகு காலம், எம கண்டம்:
 
பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்கன் திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு தேவர்கள் போல வேடமிட்டு திருட்டுத் தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் கோபமடைந்த திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அமிர்தம் உண்ட இராகுவின் தலை மற்றும் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு / கேதுக்கள் ஆகின்றன. இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர்.
 
இந்த சமயத்தில் தான் காலக் கணிதத்தில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையிலான முக்கியமான ஏழு கிரகங்களுக்கு நாட்களை பிரித்து கொடுத்து விட்ட நிலையில், இராகு / கேதுவிற்கு எதை கொடுப்பது?
 
இறுதியாக சிவபெருமான் ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுக்களுக்கு தர உத்தரவிடுகிறார். அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இராகு / கேதுக்கள் வலிமையுடன் செயல்படுவார்கள். அதுவே இராகு காலம், எம கண்டம் எனப் பெயர் பெற்றது.