வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

குளித்து முடித்தவுடன் முதுகைதான் முதலில் துடைக்கவேண்டும் எனக் கூறவது ஏன்...?

ஒருவரை நாம் திட்டும் போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில்,மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டுக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.
பத்ம புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி  என்றும் அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள்  என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இதுதான் பின் நாளில் மூதேவி என்று மாறிவிட்டது என்கிறார்கள்.
 
அவளுடைய தோற்றத்தைப் பொறுத்த வரையில், ஆகம நூல்களின் படி மூத்த தேவி, அகோரமான மற்றும் அலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றாள்.
 
ஜேஷ்டா தேவி: எங்கெல்லாம் துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி  விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இருக்கிறதோ இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த இடங்களாகும். 
 
நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
 
குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். குளிக்கும் போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ள வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும். நாம் குளித்து முடித்தவுடன்,  தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்வாள். அப்படி அவள் நம் தலையில் அமர்ந்தால், நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே,  முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள்.
 
அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நாம் முகம் தெளிவாகவும், சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும்.