1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவண்ணாமலையின் வேறு பெயர்களும் சிறப்புகளும் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.

இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.
 
சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றது தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். 
 
கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (ரமணம் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், திருமண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. 
 
சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு. சிவபெருமானே லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
 
அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
 
இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டது. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
 
இந்த மலையை ஒவ்வொரு இடத்தில்  நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம் என்பது சிறப்பு.
 
உமைக்கு இடபாகம் கொடுத்து சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்த தலம். கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
 
ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது.
 
இம்மலையின் வேறு பெயர்கள்: கவுரி நகர், தேகநகர், அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு.