வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

த்ரிபுராசுரர்களை வதம் செய்ய சிவபெருமான் புறப்படும் போது விநாயகரை வழிபட மறந்து விட்டார். உடனே தேர்ச் சக்கரத்தை உடைய செய்தார் விநாயகர். உண்மை நிலையை உணர்ந்த சிவபெருமான் தன் ஞான த்ருஷ்டியால் உணர்ந்து விநாயகரை வழிபட்டு வெற்றி கண்டார்.

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுங்கள். விநாயகரை வணங்கினால் வினைகள் தீரும். கணங்களின் அதிபதி ஆதலால் இவர்  கணபதியாவார். 
 
விக்னங்களை போக்குபவர் விநாயகர். விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம். சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை  செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.  
 
இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி  அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.
 
சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும்  சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். 
 
இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாத வர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.