1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரவேண்டும் தெரியுமா...?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
 
 
நவகிரகங்களின் நன்மையைப் பெறவும், அவை தீமை தரும் காலங்களில் அவற்றை வணங்கினால், பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இன்று ஆலயத்துக்கு செல்பவர்கள் பெரும்பாலும் ஜாதகத்தில் தம்மை தொல்லை செய்யும் நவக்கிரகங்களின் அருளை பெறுவதற்காகவே செல்கிறார்கள். சிலர் நவக்கிரக வழிபாடு மட்டும் செய்துவிட்டு, மூலவரை தரிசிக்காமல் வந்துவிடுவார்கள். அவ்வாறு செய்வது கூடாது. 
 
எந்த கோயிலுக்குச் சென்றாலும், மூலவரையும் பிற தெய்வங்களையும் தரிசித்த பிறகே, இறுதியாக நவகிரகத்தை சுற்றிவர வேண்டும். அதனால், எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும், மூலவரை தரிசிக்காமல் நவகிரகங்களுக்கு மட்டும் பரிகாரம் செய்வதும் வழிபடுவதும் நிச்சயம்  எதிர்பார்த்த பலனை அளிக்காது.
  
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற ஏழு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றுவதால் வலதுபுறமாக  சுற்றவேண்டும். ராகு, கேது கிரகங்கள் இடமிருந்து வலது புறமாக சுற்றுவதால், இடமிருந்து வலமாக சுற்றவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இப்படி சுற்றுவது தவறானது. நவகிரகங்களைச் சுற்றும்போது வலதுப்புறம், இடதுப்புறம் என்று பிரித்து சுற்ற வேண்டியதில்லை. 
 
சுற்றி வரும்போது நவகிரகங்களைத் தொட்டு வணங்க கூடாது. ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு பலனைத் தருகிறது. புகழுக்கு சந்திரனும், ஆரோக்யத்துக்கு சூரியனும், மன வலிமைக்கு செவ்வாயும், புத்தி கூர்மை பெற புதனும், குறையில்லா செல்வம் பெற குரு பகவானும்,  இல்வாழ்க்கை, மனை யோகம் பெற சுக்கிரனும், ஆயுள் பலம் அதிகரிக்க சனி பகவானும், வெற்றிக்கு ராகு பகவானும், ஆன்மிக ஞானம் பெற,  கேது பகவானும் அருள் புரிவார்கள்.
 
நவகிரகங்களை முதலில், 9 முறை சுற்றி வந்த பிறகு நீங்கள் விரும்பும் பலனை பெற, அந்த கிரகத்திற்குரிய எண்ணிக்கையில், மீண்டும் வலம்  வந்து வணங்கினால் சிறப்பு பெறுவீர்கள். இனி ஆலயங்களில், மூலவரையும் மறக்காமல், நவகிரகங்களையும் வணங்கி வழிபடுங்கள்.  நவகிரகங்களால் நன்மை பெறுவீர்கள்.