1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகா சிவராத்திரி விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள் !!

மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி  கிடைக்கும்.
 


பிரளய காலம் முடிந்த அன்றைய இரவில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜை செய்தாள் உமாதேவி. பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, “ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு சிவராத்திரி என வழங்கப்படவேண்டும்.

இந்தத் தினத்தில் சூரிய அஸ்தமனம் முதல், மறுநாள்  காலை சூரிய உதயம் வரையிலும் தங்களை பூஜிப்பவர்களுக்குச் சர்வ மங்கலங்களுடன் நிறைவில் முக்திப் பேறையும் அருள வேண்டும்!” என வேண்டினாள்.  பரமசிவனும், “அப்படியே ஆகுக!” என்று அருள்புரிந்தார். அம்பிகை பூஜித்த அந்த நாளே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. 
 
சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண்விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.
 
மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண்விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.
 
மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.