1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

'ஓம்' என்று தொடர்ந்து உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் 'ஆ', 'ஓ', 'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது. நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது.

'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும். 'ஓம்' எனும் மந்திரம்  நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.
 
எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச்  தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.
 
ஓம் என்னும் மந்திரம் உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.
 
கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.
 
சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்' என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை  கிடைக்கும்.
 
'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம்  கட்டுப்படும்.
 
'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.