வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதம் பற்றிய புராணக்கதைகளும் பலன்களும்...!!

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த  விரதம் ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது.

நமக்கு செல்வத்தை அள்ளி தருபவள் ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை வேண்டி விரதம் இருப்பது நமக்கு நன்மையை அளிக்கும். வீட்டில் செல்வ வளத்தை பெருக்க  ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் ஒரு பூஜை தான் வரலட்சுமி பூஜை. வருடத்திற்கு ஒரு முறை அந்த பூஜை செய்யப்படும்.
 
பூஜை முடிந்த பின், அர்க்கியம் விட்ட பிறகு, மஞ்சள் சரடை வலது கையில் கட்டிக்கொள்ளவும். மாலையில் அம்மனுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து, கற்பூரம்  ஆரத்தி எடுக்கவும். பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்கவும். மறுநாள் காலை புனர்பூஜை செய்து, அம்மனை எடுத்து அரிசி பானையில்  வைக்கவும்.
 
அம்மன் வைத்த அரிசியை, வரும் கிருஷ்ண ஜயந்தி பட்சணம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம். 
 
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள்  கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
 
பூவுலகில் சௌராஷடிரா நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து  வருந்தினாள்.
 
சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு  வாழ்ந்தாள்.