வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:50 IST)

கோவையில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா

கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு  விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வருகிறார். இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
ஜக்கி வாசுதேவ் நடத்தும், ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிவன் திருமுகச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்பதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
 
பிரதமர், முதல்வர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த  ஒரு வாரமாகவே பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 6 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகரில் போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.