1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (10:54 IST)

மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்பில் இருங்கள்! - உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை!

Sadhguru
உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், "பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கையுடன் தொடர்பிலிருப்பது " என சத்குரு கூறியுள்ளார்.


 
எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.  ஏனென்றால் உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும் உடலை வருத்தாமலும் இருந்தால் மனச்சோர்வில் ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால் அவதிப்படும் குழந்தைகளை விளையாட்டிலும் இசையிலும் ஈடுபடுத்த வேண்டும்.

கணினி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களால் ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீர், ஒளி, மண் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் உங்களுடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்.

நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப உங்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மன ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்தும் உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக் கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ், தேன் போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.   பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்" என சத்குரு கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக “X”  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக மற்றும் ஆற்றல் ரீதியாக சமநிலையுடன் இருந்தால் உங்கள் உட்சபட்ச திறனுடன் உங்கள் வாழ்கையை நடத்துவீர்கள்.

சமநிலை தான் மிக முக்கிய அம்சம்.  சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும். சமநிலை என்பது தான் ஆரோக்கியம். உடல்ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வு ரீதியாக நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால், சமநிலை அவசியம்.” என கூறியுள்ளார்.