1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (12:06 IST)

”விராட் கோலியவே தப்பா பேசுறியா?” நண்பனை கொடூரமாக கொன்ற இளைஞர்!

Virat Kohli
பிரபல கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தவறாக பேசியதாக நண்பனையே இளைஞர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே கிரிக்கெட் ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்கு சப்போர்ட்டாக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம். ஆனால் தற்போது அரியலூரில் வேறு வகையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.


அரியலூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் தனது நண்பர் விக்னேஷ் என்பவரோடு ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித்சர்மா குறித்து விக்னேஷ் தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்த நிலையில் வாக்குமூலத்தில் நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K