வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (11:39 IST)

நாட்டு நடப்பு தெரியணும்.. இல்லைன்னா மூளையாவது இருக்கணும்..! - எடப்பாடியாரை தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின்!

EPS Stalin

கலைஞர் நாணய வெளியீட்டு விழா குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

 

சமீபத்தில் சுதந்திர தின விழாவில் நடந்த ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது, நேற்று நடந்த கலைஞர் 100 சிறப்பு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டது உள்ளிடவற்றை குறிப்பிட்டு விமர்சித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதன்மூலம் திமுக - பாஜக ரகசிய உறவு வெளிப்பட்டு விட்டதாக பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று திமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை விமர்சித்துள்ளார்.

 

அதில் அவர் “கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளதை சுட்டிக்காட்டி, திமுக இந்திக்கு ஆதரவு தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஏற்கனவே வெளியிடப்பட்ட அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களின் நினைவு நாணயங்களை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார் போல.
 

 

எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி மொழியில்தான் வார்த்தைகள் இருக்கும். அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவரது தமிழ் கையெழுத்தை கலைஞர் அவர்கள் இடம்பெற செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கு நாட்டு நடப்புகள் தெரிய வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும். இப்படி ஒரு எதிர்கட்சி தலைவர் நமக்கு வாய்த்துள்ளார்.

 

ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்ட இவர்கள், அவருக்காக ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தினார்களா? இரங்கல் கூட்டம் கூட நடத்தாதவர்கள் கலைஞர் நாணயம் வெளியீடு குறித்து விமர்சிக்க தகுதியே கிடையாது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K