1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Woman killed in private bus accident: 30 people including 4 policemen injured!

தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு: 4 போலீசார் உட்பட 30 பேர் காயம்!

Accident
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


 
பேருந்தில் பயணித்த நான்கு போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்தனர். திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் தனியார் பேருந்தை சிவகங்கை கீழ வாணியங்குடியை சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரன் ஒட்டியுள்ளார்.

பேருந்தில் காரைக்குடிக்கு வந்துள்ள ஆளுநரின் பாதுகாப்புக்குச் சென்ற போலீசார் 10  போலீசார் உட்பட 30 பேர் பயணம் செய்துள்ளனர்.

மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பேருந்து சோழபுரம் அருகே வரும்போது தனியார் பேவர் பிளாக் நிறுவனத்தில் கிரஷ்ர் மணல் இறக்க வந்த லாரி சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதனை கவனிக்காமல்  தனியார் பேருந்து  ஓட்டுனரின் கவன குறைவால் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து பின்னால் வந்த காரும் பேருந்தில் மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிவகங்கை   சாஸ்திரி தெருவை சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் ஜெயப்பிரியா (42) பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.

மேலும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முருகன்,  ஆயுதப்படை காவலர்கள் கருணாகரன் (44), அஜீத், திருப்பத்துரை சேர்ந்த சுந்தர்ராஜன் (35) உட்பட 30க்கும் மேற்பட்டோர் காய்மடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த ஜெயப்பிரியாவின் உடலை உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழையின் காரணமாக ஓட்டுனரின் கவனக்குறைவால் நடைபெற்ற சாலை விபத்தில் பெண் உயிர் இழந்த சம்பவம் சிவகங்கையில் சோகத்தை ஏற்படுத்தியது.
அடுத்த கட்டுரையில்
மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்.. போலீஸார் வழக்குப்பதிவு..!