1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (23:56 IST)

கூட்டணி கட்சி தர்மத்தினை மீறியவர்கள் மீது முதல்வரின் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை என்ன ?

கரூர் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சி தர்மத்தினை மீறியவர்கள் மீது முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை என்ன ? கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 11 வாக்குகள் மட்டுமே வாங்கி கொடுத்த திமுக கட்சி .திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி மீது  தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வை எப்போதும் படும்.
 
கரூர் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக முதன்முதலில் மாற்றப்பட்ட நிலையில், முதன்முதலாக தேர்தலை சந்தித்தது. தமிழக முழுவதும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி தர்மத்திற்கு எதிராக நடந்தவர்கள் உடனடியாக அந்த பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், இல்லையென்றால் உடனடியாக பதவி பறிக்கப்படும் என்றும் உத்திரவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் திமுக வினர் மனம் மாறி அவரவர் பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாநகராட்சி தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வார்டுகளில் ஒரு வார்டினை மட்டும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அதில் வேட்பாளர் ஸ்டீபன் பாபு வெற்றி பெற்றார்.

மீதமுள்ள, இரண்டு இடங்களில் திமுக கட்சியே போட்டி சுயேட்சையை நிறுத்தி அதில், 12 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகா பாலகிருஷ்ணன் காங்கிரஸ் சின்னத்தில் நின்று, திமுக வினரால் நிறுத்தப்பட்ட சுயேட்சை வேட்பாளர் மஞ்சுளா பெரியசாமி என்பவரால் தோற்கடிக்கப்பட்டதோடு, காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 70 தான் தபால் வாக்குகள் இல்லை, இந்நிலையில் டெபாசிட் தொகையும் இழந்தது. ஆனால் சுயேட்சை வேட்பாளர் மஞ்சுளா பெரியசாமி தபால் வாக்குகள் 9 சேர்த்து மொத்தம், 1853 பெற்று வெற்றி பெற்றார். இதற்கு மூலக்காரணம் திமுக கட்சி தான் என்றும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பழிவாங்குவதற்காக, இந்த 12 வது வார்டும் தோற்கடிக்கப்பட்டது. அதே போல், இந்த 16 வது வார்டும் தோற்கடிக்கப்பட்டது. 16 வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெரியசாமி என்பவரை எதிர்த்து திமுக வினரால் நிறுத்தப்பட்ட பூபதி தேர்தலில் 2330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியானது தபால் வாக்குகள் ஒன்றும் சேர்த்து மொத்தம் 113 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகை இழந்தது. ஆனால், கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியின் ஏற்பாடு தான் என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்., அதே போல், தென்னைமர சின்னம் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இருவருக்கும் திமுக வினர் தான் வாக்குச்சாவடி வரை சென்று தேர்தல் கேன்வாஸ் செய்துள்ளனர். காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தெரிந்தும் தெரியாதது போல், நடந்து கொண்டு ஒருவழியாக ஜெயித்த இரு சுயேட்சைகளில் ஒருவர் திமுக விற்கும், மற்றொரு பெண்மணி மஞ்சுளா பெரியசாமி காங்கிரஸிலும் சேர்ந்து கொண்டார். இதே போல, திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 11 வது வார்டு ஒதுக்கப்பட்டு அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டும், அதில் திமுக சின்னத்திலேயே திமுக வேட்பாளர் பழனிக்குமார் என்பவரும் நிறுத்தப்பட்டு அதிலும் தோல்வி பெற்றார். ஏனென்றால் ஜெயித்தது அதிமுக வை சார்ந்த தினேஷ்குமார் 1651 வாக்குகள் பெற்று ஜெயித்த நிலையில்., திமுக வேட்பாளர் பழனிக்குமார் 1621 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதில் வேடிக்கையான விஷயம் என்ன என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தான் அந்த வார்டின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் கூட, ஆனால் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 11 மட்டுமே, அவரும் டெபாசிட் தொகையினை இழந்தார்.

ஆகவே, கரூர் மாநகராட்சியில் மட்டும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இருவரை எதிர்த்து சுயேட்சைகளை களமிறக்கியதோடு, திமுக வினரின் ஆதரவோடு அந்த சுயேட்சைகளுக்கும் ஒரே சின்னமாக தென்னைமர சின்னத்தினை கொடுத்து ஜெயிக்க வைத்ததோடு. எதிர்த்து நின்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்ததும் இல்லாமல், அவர்களின் டெபாசிட் தொகை இழக்குமளவிற்கு திமுக கட்சி வேலை பார்த்துள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வார்டு ஒதுக்கியும், அதே வார்டில் திமுக சின்னத்தோடு திமுக வேட்பாளரை நிறுத்தி அவரும் தோற்றுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும் டெபாசிட் இழந்துள்ளார். ஆகவே கூட்டணிக்குள் குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு, கூட்டணி கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைத்த கரூர் மாவட்ட திமுக மீது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பார்வை எப்போதும் விழும் என்கின்றனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள். ஆகவே, நியாயப்படி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள்.