1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (12:58 IST)

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76 அடியைத் தாண்டியது

பவானிசாகர் அணைக்குத் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் 76 அடியைத் தாண்டியது.

 
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது, பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி கழித்து, மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். மொத்த நீர்க் கொள்ளவு 32 டி.எம்.சி. ஆகும்.
 
இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீரால், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதியைச் சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன.
 
இந்த நிலையில் கடந்த மாதத்தின் இறுதியில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் பருவ மழை தொடங்கியதால் அணையின் நீர்வள ஆதாரமான பவானி ஆறு மற்றும் மோயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் தண்ணீர் குறையத் தொடங்கியது.
 
இந்த நிலையில் நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 6518 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.36 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.