விஜயகாந்தை கைது செய்யக்கோரி அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
திருப்பூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதில் மனமுடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ராஜவூர் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டரான தங்கவேல் ஜெயலலிதா மீது மிகுந்தப்பற்று கொண்டவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் தஞ்சையில் தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவை ஒருமையில் திட்டியதுடன், முதலமைச்சரை தரக்குறைவாகவும் விமர்ச்சித்துள்ளார். இதை அறிந்த அவர் மனவேதனை அடைந்துள்ளார்.
இந்நிலையில், விஜயகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அவரை கைது செய்யக்கோரியும் திடீரென நேற்று உடுமலைப்பேட்டை அருகே தங்கவேல் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் தங்கவேலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.