வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (13:11 IST)

கஸ்டமராய் வந்த கஷ்டம் – பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை

சென்னை வியாசர்பாடியில் கஸ்டமர் போல வந்து நகைகளை களவாடி சென்ற இரண்டு திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா இருந்தும் அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் இப்படி செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ளது விநாயகா ஜுவல்லர்ஸ். இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்கள் நகை வாங்க வந்தனர். அதில் ஒருவர் தொப்பி அணிந்திருந்தார். மற்றொருவர் கைக்குட்டையை கொண்டு முகத்தை மூடியிருந்தார். அப்போதே கடைக்காரர் சுதர்சனம் உஷாராகி இருக்க வேண்டும்.

மோதிரம் வாங்க வந்திருப்பதாக சொன்ன அவர்களுக்கு மோதிரத்தை எடுத்து காண்பித்தார் சுதர்சனம். அதை வாங்கி கையில் போட்டுக்கொண்டு வேறு மாடல்களை காட்டும்படி கேட்டிருக்கின்றனர். அவர் அந்த மோதிரத்தை கழட்டி கொடுங்கள் வேறு டிசை காண்பிக்கிறேன் என சொல்லியுள்ளார். அதற்கு சுதர்சனத்தோடு விவாதத்தில் ஈடுபட்டனர் இளைஞர்கள். சரியென்று வேறு மாடல்களை காண்பிக்க மோதிர பெட்டியை எடுத்ததும் தொப்பி அணிந்தவர் தானாக அதிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து பையில் போட்டுக்கொண்டார்.

முகமூடி அணிந்த நபர் காசு எடுப்பது போல் பைக்குள் கையை விட அந்த சமயத்தில் கூட வந்தவர் வெளியே ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து ஓட முயன்ற முகமூடி அணிந்த நபரை சுதர்சனம் இறுக்க பிடித்து கொண்டு உதவிக்கு ஆள் கூப்பிட்டு கத்தியிருக்கிறார். அவரை அடித்துவிட்டு ஓடிவிட்டார் அந்த முகமூடி நபர். இவ்வளவும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுதர்சனம். போலீஸார் அந்த இரண்டு திருடர்களையும் தேடி வருகின்றனர்.