ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 மார்ச் 2025 (12:27 IST)

ஹெலிகாப்டர்லயே வந்தாலும் விஜய் பதவிகள் தரமாட்டார்! - புஸ்ஸி ஆனந்த் உறுதி!

Bussy Anand

மாற்றுக்கட்சியினருக்கு தவெகவில் உடனடி பதவிகள் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து கட்சி தொண்டர்களிடையே மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியுள்ளார்.

 

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்டம்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது, அதில் தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டிகள், விவசாயிகளுக்கு மண்வெட்டி, சலைவைத் தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, 500 மகளிருக்கு மளிகை பொருட்கள், சேலை, மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, செவிலியர்களுக்கு கோட், பெண்களுக்கு சில்வர் குடம் என 1568 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய புஸ்ஸி ஆனந்த் “பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திக் காட்ட முடியும். அதனால்தான் நம் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பெண்கள் வலிமையானவர்கள், போர் குணம் மிக்கவர்கள். தாய்மார்களின் அன்பும், ஆதரவும் நம் தலைவர் தளபதிக்கு அதிகம் உள்ளது. உங்களை போன்ற தாய்மார்களை நம்பிதான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். 

 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ வேறுக் கட்சிகளில் இருந்து வருகிறார்கள், அவர்களுக்குதான் பதவி கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலிருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்குதான் நம் தலைவர், பதவிகள் வழங்குவார். மாற்று கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலேயே வந்தாலும் கூட தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நம் தலைவர். இதில் எந்த அச்சமும் தேவையில்லை” என அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K