செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (09:03 IST)

ஸ்டெர்லைட் துயர சம்பவம்: கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்

நேற்று நடந்த தூத்துகுடியின் ஜாலியான் வாலாபாக் படுகொலைக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. எதிரிநாட்டு தீவிரவாதிகளை சுட்டு கொல்வது போல் சொந்த மாநில மக்களையே சுட்டு கொன்றதாக தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய டுவிட்டரில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
விஜய்சேதுபதி: எல்லோருடைய நல்வாழ்விற்காக மட்டுமே போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கேட்டவுடன் வருத்தம், கோபமடைந்தேன்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்
 
விவேக்: நம் மண்ணின் மைந்தர்கள் மரணி ப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை.இறந்து பட்ட அந்த சகோதர சகோதரிகளுக்காக நம் இதயம் அழுகிறது. அந்த நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும்.
 
தனுஷ்: ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
 
பார்த்திபன்: துப்பாக்கி வெடிக்கும் - தெரிந்தும்,
புரட்சி வெடிக்கும் - தெரியாமலும்
அதிகாரம் ஜனநாயகத்தை
ஒடுக்க நினைக்கிறது
பசியால்
மார்பை நாடி வரும் சிசுவை
முலைக்காம்பே தோட்டாவாக இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல் போல ...தம் மக்களை தாயே(அரசே) கொன்று குவித்தால்?
 
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: அரசு தனது வன்முறையும், கொலைகளும் மக்கள் போராட்டத்தை மௌனித்துவிடுமென நினைப்பது ஜனநாயக படுகொலையின் உச்சம். தண்டிக்கப்படாத தீவைப்பும்,தடியடியும் தந்த தைரியமின்று துப்பாக்கிசூடாக தொடர்கிறது.இன்னுமெத்தனை நீதி விசாரனைகள் வேண்டும்,மரணிக்கப்பட்ட ஆன்மாக்களை சாந்தப்படுத்த?
 
சிம்புதேவன்: தூக்கமற்ற வலி மிகுந்த இரவு! நீதிக்காக மாத கணக்கில் நேர்மையாக போராடிய மக்களை.. வேட்டையாடிய அநீதி! எதை நோக்கி போகிறது நம் எதிர்காலம்?
 
பாரதிராஜா: தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்களாட்சியா இல்லை வெள்ளைக்காரன் ஆட்சியா? ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு இதுபோன்ற சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. மக்களை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைத்திருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது
 
பாடலாசிரியர் விவேக்: நான் திரைப்படத்திற்காக எழுதிய முதல் வசனம் நினைவிற்கு வருகிறது. "எங்கள மாதிரி உள்ளவங்க கைகள் எப்பவும் கீழயே இருக்கும்னு நெனச்சிடாத.. ஒருநாள் .. எங்க கைகள் ஓங்கும்" என் உடன்பிறந்த ஒவ்வொருவர் மரணத்திற்கும் நீங்கள் பதில் சொல்லும் நேரம் வரும்
 
சசிகுமார்: நச்சுக்கு பலியாவதை விட தம் மண்ணைக் காக்க மடிவதே மேல் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களை கைவிட்டது யார்? இப்போது அவர்களைக் கொல்வது நீதியா? தூத்துக்குடி மக்களின் உயிர் காக்க
 
சத்யராஜ்: எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா?
 
இயக்குனர் சீனுராமசாமி: உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது இது
ஜனநாயகப் படுகொலை. எக்காரணம் கொண்டும் துப்பாக்கி சூடு ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமை கேட்போர் மீது நடந்த உச்சகட்ட வன்முறை
 
பா.ரஞ்சித்: அரசு எப்போதும் மக்களுக்கானதாக இல்லவே இல்லை. அரசு என்பது வன்முறை-அதிகாரம்-கொடுக்கோலன் & பயங்கரவாதம். நிலம்,நீர்&மக்களின் ரத்தம் உறிந்து கொழிக்கும் கார்ப்ரேட்டுகளின் அரசே நீ ஒரு போதும் கவலைகொள்ள மாட்டாய்..உனக்கு தெரியும் மறதி கலையில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள் என்று
 
அறிவழகன்:ஜாலியன்வாலாபாக் 1919 படுகொலைக்கும் தூத்துக்குடி 2018 படுகொலைக்கும் வருஷங்களை தவிர பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை