1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (13:00 IST)

ஸ்டாலினை தொடர்ந்து அழகிரி: மெளனம் சாதிக்கும் அதிமுக அரசு!!

சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன் என தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
கொரோனா பரிசோதனைகளுக்காக மத்திய அரசு சீனாவிடமிருந்து இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலமாக ரேபிட் கருவிகளை வாங்கியது. அதே சமயம் தமிழகம் வேறொரு நிறுவனத்தின் மூலம் ரேபிட் கிட்களை வாங்கியது. 
 
இரு நிறுவனங்களுமே சீனாவிடமிருந்து ரூ.245 க்கு ரேபி கருவிகளை வாங்கி ரூ.600க்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ரேபிட் கருவிகளை ரூ.400க்கு விற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குறைந்த விலையே உள்ள ரேபிட் கருவிக்கு தமிழக அரசு அதிக விலை கொடுத்தது ஏன்? மத்திய அரசின் அங்கீகாரமற்ற ஒரு தரகு நிறுவனத்தின் மூலம் ரேபிட் கருவிகளை வாங்கியது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார். 
இவரை தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இதே கேள்வியை தமிழக அரசின் கேட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்? 
 
ஐசிஎம்ஆர் அங்கீகரிக்காத விநியோகிஸ்தர்களிடம் இருந்து ரேபிட் சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியது ஏன்? தகுதியான நிறுவனத்திடம் சோதனை கருவிகளை வாங்காத மத்திய, மாநில அரசு மக்களை எப்படி காப்பாற்றும் என பல கேள்விகளை தமிழக அரசுக்கு அடுக்கியுள்ளார் கே.எஸ்.அழகிரி.