வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (15:07 IST)

உடைந்த கத்தியை உடம்பிற்குள் வைத்து தைத்த செவிலியர்கள்

ஒரு தகராறில் கத்தி குத்து பட்ட இளைஞருக்கு, உடைந்த கத்தி முனை உள்ளே இருந்தபடியே செவிலியர்கள் தையல் போட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூர் என்ற கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரை, ஜானகி ராமன் என்பவர் முன்பகை காரணமாக கத்தியால் குத்தினார். உடனே பாரதி, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் செவிலியர்கள் ரத்தத்தை துடைத்து தையல் மட்டும் போட்டுள்ளனர். பின்பு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவருக்கு கத்தியின் முனைப்பகுதி உடைந்து அவரது உடலில் இருந்துள்ளது தெரியவந்தது. ஆனால் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை. அதன் பிறகு பாரதியை புதுச்சேரியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு அங்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்த கத்தி முனை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடலூர் அரசு மருத்துவனை நிர்வாகம், பாரதியின் உடலில் கத்திமுனை இருந்தது உண்மை தான். ஆனால் இங்கு அறுவை சிகிச்சை செய்ய வசதியில்லை. பாரதி கத்தி குத்துப்பட்டு வந்தபோது ரத்தப்போக்கு அதிகம் இருந்ததால் அதனை கட்டுப்படுத்த உடனே தையல் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தி முனையை உடலுக்குள் வைத்து தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.