வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (11:58 IST)

திருடிய காசில் வாங்கிய ஜிமிக்கி கம்மல்; கள்ள காதலால் சிக்கிய பலே திருடன்!

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவன் கள்ளக்காதல் விவகாரத்தால் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலைக்கு அருகே உள்ள பீட்டர்ஸ்பர்க் சாலை குடியிருப்பு பகுதிகளில் பல நாட்களாக பொருட்கள் திருட்டு போய் கொண்டிருந்திருக்கின்றன. தினமும் சைக்கிள், பைக், தங்க நகை உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் வீடு ஒன்றில் 5 சவரன் தங்கம் திருடு போனதையடுத்து இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிசிடிவி காட்சியை ஆராய்ந்ததில் மாட்டாங்குப்பத்தை சேர்ந்த மேகநாதன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை அழைத்து சென்று விசாரிக்கையில் முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த மேகநாதன் பிறகு அந்த பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

திருடிய நகைகளை தி.நகரில் உள்ள நகை அடகுக்கடை ஒன்றில் விற்றதும் தெரிய வந்துள்ளது. அந்த நகை அடகுக்கடை உரிமையாளரிடம் இருந்து 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருடியதற்கு மேகநாதன் சொன்ன விளக்கம் போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேகநாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளியூரில் உள்ள நிலையில் வேறு ஒரு மணமான பெண்ணுடன் மேகநாதன் தொடர்பில் இருந்துள்ளார். தனது கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி தருவதற்காக திருட்டில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலிக்காக அவர் வாங்கிய ஜிமிக்கி கம்மலையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.