1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (06:20 IST)

பூட்டிய கடையை உடைத்து எக்சேஞ்ச் ஆஃபர் செய்து கொண்ட திருடன்

பூட்டிய கடையை உடைத்த ஒரு திருடன் ஒரே ஒரு மொபைல் போனை மட்டும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் செய்து விட்டு தப்பி ஓடிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பழைய போனை கொடுத்து விட்டு புதுபோனை எக்சேஞ்ச் ஆஃபரில் வாங்குவது பலருக்கு வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்த ஒரு திருடன் தன்னுடைய பழைய போனை கடையில் வைத்து விட்டு ஒரே ஒரு புதுபோனை மட்டும் திருடிக் கொண்டு சென்ற சம்பவம் கடைக்காரரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 
சென்னை தண்டையார்பேட்டையில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜானகிராமன் என்பவர் தனது கடையின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கடை நோக்கி வந்தார். இந்த நிலையில் செல்போன் கடையில் திருடும் நோக்கத்தில் வந்த திருடன் கடை ஓனர் வருவதை பார்த்ததும் அவசரஅவசரமாக ஒரே ஒரு செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
 
கடைக்காரர் தன்னுடைய கடைக்குள் நுழைந்து என்னென்ன பொருட்கள் திருடுபோனது என சோதனை செய்தபோது ஒரே ஒரு போன் மட்டுமே திருடு போனது என்பதும் கல்லாபெட்டி உள்பட வேறு எதிலும் திருடன் கைவைக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த திருடன் தனது பழைய மொபைல்போனை விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது
 
இதனை அடுத்து போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அதன்பின் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவருகின்றனர். உண்மையிலேயே எக்சேஞ்ச் செய்ய அந்த திருடன் வந்தானா? அல்லது மறதியில் தன்னுடைய போனை விட்டுவிட்டு சென்றானா? என்பது வழக்கின் முடிவில் தான் தெரிய வரும்