வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 28 மார்ச் 2016 (04:46 IST)

ஒலிம்பிக் போட்டியில் விருது வென்ற குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் விருது வென்ற குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தெருவோர குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டியில் விருது வென்ற தமிழக வெற்றிக் குழந்தைகளை திமுக பொருளாளர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
பிரேசிலில் நடைபெற்ற "தெருவோர குழந்தைகளுக்கான உலக நாடுகளின் ஒலிம்பிக் போட்டி"யில் பங்கேற்று, 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று திரும்பிய ஹெப்சிபா மற்றும் 400மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சினேகா, குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறுவன் அசோக் ஆகியோரை கருணாலயா அமைப்பின் நிர்வாகிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
 
அப்போது, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, உலக ஒலிம்பிக் போட்டியில் விருதுகளை வாங்கி சாதனை படைத்த அவர்களை மு.கஸ்டாலின் வாழ்த்தினார்.
 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிய சாதனையை செய்திருக்கும் இவர்களை தமிழக அரசின் அதிகாரிகள் கூட சென்று விமான நிலையத்தில் வரவேற்கவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது மட்டுமின்றி வேதனைக்குரியது.
 
2016 மே மாதம் அமையும் கழக அரசில் தமிழக விளையாட்டு வீரர்கள் உலக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவிக்கும் அளவிற்கு அனைத்து வசதிகளும், பயிற்சிகளும் செய்து கொடுக்கப்படும் என்று கூறி, அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறி அவர்கள் மென்மேலும் இது போன்ற பல தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்து தமிழகத்திற்கும், நாட்டிற்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.