வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:45 IST)

குப்பை கிடங்கில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

வெள்ளலூர் குப்பை கிடங்கை 2018 ஆம் ஆண்டு அகற்றும் படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை, கோவை மாநகராட்சி பின்பற்றவில்லை. ஒரு ஆண்டில் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என கொடுத்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.
 
கோவை மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி அளித்ததை நிறைவேற்றாததால், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். 
 
அந்த வழக்கு சென்னை பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது.
 
இதில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில்,  ஒரு வருடத்திற்குள் பழைய குப்பைகளை அழித்து விடுவதாக உறுதிமொழி அளித்த கோவை மாநகராட்சி ஆறு வருடமாகியும் இதனை செய்யாதது குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. 
 
அதனால் இது குறித்து தெளிவான விரிவான அறிக்கையை அடுத்த விசாரணைக்குள் அளிக்குமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 
கோவை மாநகராட்சி ஆணையருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான தீர்வை எட்ட வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளருக்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.
 
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
"கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், கோவை மாநகராட்சி, 36 இடங்களில் MCC (Micro Composting Centre)  ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் 5 டன் அளவுள்ள குப்பைகளை மேலாண்மை செய்வதாக தவறான தகவலை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது 81 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துவிட்டதாக கோவை மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் மேலும் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அடுத்த விசாரணை நடைபெறுவதற்கு முன்பாக கோவை மாநகராட்சி கால நிர்ணயத்துடன் கூடிய செயல் திட்ட அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.