1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (23:24 IST)

விஜய் மல்லையா திதிவாலானவர் என அறிவித்தது லண்டன் உயர் நீதிமன்றம்

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை "திவாலானவர்" என்று அறிவித்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.
 
இது தொடர்பாக அவர் கடன் பெற்றிருந்த வங்கிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய ஸ்டேட் வங்கி 2018இல் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், "விஜய் மல்லையா திவாலனவர். அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம்," என்று கூறியுள்ளது.
 
இந்த தீர்ப்பு இந்திய வங்கிகள் குழுவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை விஜய் மல்லையாவுக்கு உள்ளது.
 
முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக எஸ்பிஐ தலைமையில் பரோடா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜேஎம் ஃபைனான்ஷியல் அசெட் ரீகன்ஸ்டிரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் சேந்து ஒரு குழுவாக எஸ்பிஐ தலைமையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
 
2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் கணக்கிட்டு, ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என்று அந்த வங்கிகள் கோரின.
 
ஆனால், இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா, வட்டித் தொகையுடன் கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தார். இந்த வகையில், விஜய் மல்லையா பிரிட்டன் பண மதிப்பில் 1 பில்லியன் பவுண்டுகள் வரை வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டும்.
 
இந்த நிலையில் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பணத்தை விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து ஈடு செய்ய இதுவரை நிலவி வந்த சட்ட தடங்கல்கள் நீங்கியுள்ளன.
 
இருப்பினும், மேல்முறையீட்டிலும் இந்த வங்கிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய வங்கிகளால் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து விற்க முடியும்.