1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (21:11 IST)

பெற்றோர் 'வேண்டாம்' என்று கூறிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பெண் குழந்தையே இனி வேண்டாம் என்பதற்காக கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று பெற்றோர்கள் பெயர் சூட்டிய நிலையில் 22 வருடம் கழித்து அந்த பெண்ணுக்கு தற்போது ஜப்பான் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது
 
திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் என்ற கிராமத்தில் பெண் குழந்தை இனி பிறக்க வேண்டாம் என்று முடிவு செய்பவர்கள் கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று பெயரை வைப்பது வழக்கம். அந்த கிராமத்தில் பல 'வேண்டாம்' என்ற பெயரை கொண்ட பெண்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த 22 ஆண்டுக்கு முன் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர் 'வேண்டாம்' என்று பெயர் வைத்தனர். இந்த பெயருடன் பள்ளியில் தோழிகளின் கிண்டலுக்கு ஆளாகி அதே நேரத்தில் மன உறுதியுடன் படித்தார் அந்த பெண். தற்போது சென்னை அருகே உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் 'வேண்டாம்' என்ற பெண் சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டார். அவரை ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.23 லட்சம் ஊதியத்தில் பணியமர்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவர் ஜப்பான் செல்லவுள்ளார்
 
தோழிகளும் உறவினர்களும் தனது பெயரை கிண்டல் செய்தபோதிலும் வைராக்கியத்துடன் படித்ததாகவும், நல்ல நிலைமைக்கு வந்த பின்னர் பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், ஆனால் இனிமேல் பெயரை மாற்ற விரும்பவில்லை என்றும், இதே பெயரிலேயே கடைசி வரை வாழப்போவதாகவும் 'வேண்டாம்' தெரிவித்தார். மேலும் இனிமேலாவது பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் அருமையை புரிந்து கொண்டு இதுபோன்ற பெயர்களை வைக்க வேண்டாம் என்று தனது கிராமத்தினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்