வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2015 (10:37 IST)

தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கூறி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
 
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1640 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 
இதனால், கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.2 அடியாகும். தற்போது 42 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் 1640 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
 
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றின் கரையோர பகுதிகளான பூதிநத்தம், பார்த்த கோட்டா, ராமாபுரம், பேரண்டப்பள்ளி, கோப சந்திரம், ஆலியாளம், பெத்த கொள்ளு, சின்ன கொள்ளு, தொரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரை யோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணை தனது முழு கொள்ளவை விரைவில் எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.