செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (20:35 IST)

ஆயிரக்கணக்கான லைசென்ஸ் ரத்து: பைக் ரேஸர்களுக்கு போலீஸ் வைத்த ஆப்பு

சென்னையில் பைக் ரேஸ் சாகசம் செய்பவர்களின் அட்டூழியத்தை அடக்க போக்குவரத்து போலீஸ் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு விபத்துகளும், உயிர் சேதங்களும் ஏற்பட்டுவருகின்றன. சமீபத்தில் மெரினா கடற்கரை சாலையில் இளைஞர்கள் அனுமதியின்றி நடத்திய பைக் ரேஸில் வாலிபர் ஒருவர் அடிப்பட்டு இறந்து போனார். அதுபோலவே நாளுக்கு நாள் அதிவேக பைக்குகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களும், அதை வாங்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதும் ஒரு வகையில் காரணம்.

இதனால் போக்குவரத்து போலீஸ் மக்கள் நடமாடும் பகுதிகள், முக்கிய பகுதிகளில் இடங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி வேகமாக வாகனம் ஓட்டி வரும் இளைஞர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல், பிணை தொகை கட்ட செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் யாராவது வண்டி ஓட்டி வந்தால் அவர்களிடம் வண்டியை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் அதிவேகமாக வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் விதிகளை மீறியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சொல்லி போக்குவரத்து துறைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரையில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.