1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (18:58 IST)

முதல்வர் தனிப்பிரிவில் நேரடியாக மனு வழங்குவதில் கட்டுப்பாடு! – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்வர் தனிப்பிரிவில் மனுக்கள் அளிக்கவும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க மக்கள் கூட்டமாய் கூடுவது கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில் தொய்வை ஏற்படுத்துகிறது. எனவே மனு அளிக்க வருவோர் தங்கள் மனுக்களை தனிப்பிரிவு அலுவலகத்தின் முன் உள்ள மனுப்பெட்டியில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அத்தியாவசிய சூழலில் மட்டும் தனிப்பிரிவு அலுவலரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் ஆன்லைன் மற்றும் தபால் வழியாகவும் பெறப்படுவதால் மக்கள் நேரடியாக வருவதை தவிர்த்து ஆன்லைன் மற்றும் தபால் மூலமாகவும் மனுக்களை அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.