1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 21 மே 2020 (11:42 IST)

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி – ரூல்ஸ் என்ன?

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சின்னத்திரை, பெரியத்திரை படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்தால் பல தொலைக்காட்சிகள் பழைய தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நிபந்தனைகளின்படி, வெளிப்பகுதிகளில், மக்கள் நடமாடும் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. உள்ளமைப்பு (Indoor) படப்பிடிப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான படப்பிடிப்புகளுக்கும் அனுமதி இல்லை.

சின்னத்திரை நடிகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட மொத்தம் 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு தளத்தில் ஆட்கள் இருக்க வேண்டும்.

படப்பிடிப்பில் நடிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் நடிகர், நடிகையர் மாஸ்க் அணிய வேண்டும்.

படப்பிடிப்பு சென்னையில் நடந்தால் மாநகராட்சியிலும், வெளி மாவட்டங்களில் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும்.

சுற்றுசுவர் உள்ள அரங்கம் மற்றும் வீடுகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும். படப்பிடிப்பை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.

படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல் மற்றும் சானிட்டைசர் உபயோகித்தலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் முதலிய விதிமுறைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.