வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 மே 2018 (11:54 IST)

குழந்தை கடத்தல் கொலைக்கு போலீஸ் தான் காரணம் - தமிழிசை பகீர் குற்றச்சாட்டு

குழந்தை கடத்தல் வதந்தியால் ஏற்படும் கொலைக்கு போலீஸார் தான் காரணம் என தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பரவும் செய்திகளை நம்பி, அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், அப்பாவிகளை குழந்தை கடத்தல் கும்பல் எனக்கருதி  பலரை அடித்துக்கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
திருவண்ணாமலையில் சாமி கும்பிட வந்த 5 முதியவர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல்  திருவள்ளூரில் குழந்தை கடத்த வந்தவர் என கருதி மனநோயாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
இதுகுறித்துப் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், குழந்தை கடத்தல் விவகாரத்தில் பொதுமக்கள் அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்துவது தவறு என்று கூறியுள்ளார். ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டதால், அனைத்து வட மாநிலத்தவர்களும் தவறானவர்கள் எனக் கருதக்கூடாது.

மேலும் மக்களுக்கு போலீஸ் மீதும், அரசு மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான், அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். 
 
எனவே போலீஸார் மக்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கி, இனி வரும் காலங்களில் மக்கள் வந்தந்திகளை நம்பி யாரையும் தாக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு தமிழிசை சவுந்தரராஜன் போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.