1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (15:02 IST)

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி: அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிடுவார் என அக்கட்சித் தலைமைக் கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 

 
இது தொடர்பாக கட்சி வெளியிட்ட அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 27.6.2015 அன்று நடைபெற உள்ள (11) டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக, ஜெ ஜெயலலிதா ( கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ) நிறுத்தப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தின் ஆர்.கே.நகர் உட்பட 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா தற்போது எம்எல்ஏவாக இல்லை. எனவே, 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே கடந்த 17 ஆம் தேதி சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
அவரது ராஜினாமா ஏற்கப் பட்டு, உடனடியாக அந்த தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். இந்த தகவல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மூலம் தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அடுத்த பக்கம்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என திமுக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது, எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
 

 
இந்நிலையில், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 11ல் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற 13 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 27 ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். வாக்குகள் 30 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
 
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், ராயபுரம் ஆகிய சென்னையின் பின்தங்கிய பகுதிகளைக் கொண்ட தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 208 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, இத்தொகுதியி்ல் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 2,548 பேர் அதிகம் உள்ளனர்.
 
கடந்த 1977 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011 வரை நடந்துள்ள 9 தேர்தல்களில் அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வென்றுள்ளன. 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியபோது சென்னை மாநகரில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ஆர்.கே.நகர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.