1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (17:09 IST)

பேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் போராட்டம்-போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,  திட்டமிட்டபடி நாளை( ஜனவரி 9) வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம்,  15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டது

எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்களை கருத்தில் கொண்டு  போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதை அடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து இன்று அரசுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில், 6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே நாளை( ஜனவரி 9) 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.