வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (03:12 IST)

இரவோடு இரவாக எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் கட்டிடம் இடிப்பு - ஆக்கிரமிப்பு புகாரால் நடவடிக்கை

தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து, எஸ்.ஆர்.எம். நிறுவனம் கட்டியிருந்த டிராவல்ஸ் முன்பதிவு மையம், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
 

 
சென்னை காட்டாங்கொளத்தூரில், தலித்துகளுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர்பஞ்சமி நிலத்தையும், அதேபோன்று பொத்தேரி ஏரி, பாசன கால்வாயையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக பொத்தேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
விசாரணையில், எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் பல்வேறு கட்டடங்கள், கார் பார்க்கிங், குடோன், இருசக்கர வாகன பார்கிங் மற்றும் சாலை, படகு குழாம் ஆகியவை பஞ்சமி மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இதையடுத்து முதல் கட்டமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி எஸ்.ஆர்.எம். பழைய கேம்பஸ் வளாகத்தில் கட்டப் பட்டிருந்த எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ் முன்பதிவு மையம் திங்கட்கிழமை இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. மேலும், பல கட்டடங்கள் அடுத்தடுத்து இடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.