வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (10:26 IST)

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அராஜகம்..! தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..!!

fisherman boat
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களுடைய பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. அண்மையில் இலங்கை கடற்படை தாக்கியதில் தமிழக மீனவர்கள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதே போல் மற்றொரு படகில் 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
 
இரண்டு விசைப்படகுகளிலும் சென்ற மீனவர்கள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 22 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை காங்கேசம் துறைமுகம் கொண்டு சென்றனர்.
 
மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசுகிறார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மீனவர் அமைப்பினரை அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் 22 மீனவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.