1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (05:38 IST)

’அதிமுக இப்படி செய்தது வருத்தம் அளிக்கிறது’ - தமிழிசை சவுந்தரராஜன் கவலை

பொருளாதாரத்தில் புரட்சியை உருவாக்கும் மிகப்பெரிய மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 

 
விருகம்பாக்கத்தில் ஒலிம்பிக் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. மசோதா மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும்.
 
வாட்வரி, கொள்முதல் வரி, சேவை வரி, விற்பனை வரி, விளம்பர வரி, சுங்க வரி, மாநில வரி, சொகுசு வரி போன்ற அனைத்து வரிகளையும் ஒரே வரியாக்கி ஒரே நாடு ஒரே வரி என்பதை மோடி உருவாக்கி இருக்கிறார்.
 
பொருளாதாரத்தில் புரட்சியை உருவாக்கும் மிகப்பெரிய மசோதாவுக்கு ஆதரவளிக்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் அளிக்கிறது.
 
இந்த மசோதா மாநிலங்களை பாதிக்கும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தன்னை விரும்பாவிட்டால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது, எரித்து கொல்வது, திராவகம் வீசுவது போன்ற செயல்கள் தொடருகிறது. எனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.