1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (11:51 IST)

நாளை முதல் முழு ஊரடங்கு: கடைகளுக்கு கூடுதல் அவகாசம்!!

இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 
 
கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று ஒருநாள் மட்டும் கடைகளின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  
 
அவர் தெரிவித்துள்ளதாவது, பல இடங்களுக்கு 26 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.