இனி எடப்பாடி பழனிசாமியையும் 10 ரூபாய் பழனிச்சாமி என அழைக்கலாம்: செந்தில் பாலாஜி
ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதாக தன்மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி கூறியதாவது:
அரசியல் ரீதியாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எடுபடாததால், அவர்கள் இப்போது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைத்து, அதன்மூலம் மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்ப நினைக்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 10-க்கு குறைவாக கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்கள் மீது 7,540 நடவடிக்கைகளும், ரூ. 10-க்கு மேல் வசூலிக்கப்பட்ட புகார்கள் மீது 8,666 நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அபராதமாக ரூ. 14 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2021-க்கு பிறகு திமுக ஆட்சியில் ரூ. 10-க்குக் குறைவாக வசூலிக்கப்பட்ட புகார்கள் மீது 18,253 நடவடிக்கைகளும், ரூ. 10-க்கு மேல் வசூலித்த புகார்கள் மீது 2,356 நடவடிக்கைகளுமே எடுக்கப்பட்டுள்ளன. அபராதத் தொகை ரூ. 8.51 கோடி ஆகும்.
திமுக ஆட்சியில் கூடுதல் தொகை வசூலித்து ஒருவருக்கு செல்கிறது என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றிருக்கும் என்று பதிலளித்த செந்தில் பாலாஜி, "இனிமேல் பழனிசாமியையும் '10 ரூபாய் பழனிசாமி' என்று அழைக்கப்படலாம். என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Edited by Siva