1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (13:37 IST)

தூரிகை தற்கொலை... கலங்கிய சீமான்!

கபிலன் மகள் மரணத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கபிலன் ஏராளமான திரைப்படங்களுக்கு பாடலை எழுதியுள்ளார் என்பதும் அவரது பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவளது மகள் தூரிகை என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தூரிகை தற்கொலை செய்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இவரது மரணத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். 
 
தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.