வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (15:25 IST)

கரூரில் ராக்கிங் கொடுமை: பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கரூர் அருகே ராக்கிங் கொடுமையால் பள்ளி ஒருவர் மாணவி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.


 

 
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பகுதியில் சரஸ்வதி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்தநிலையில் கரூர் காகிதபுரத்தை சேர்ந்த ஜனனி(16) என்ற மாணவி இந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்துள்ளார். ஜனனி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாக கூறி சக மாணவிகள் கேலி, கிண்டல் செய்ததோடு ஜனனியை சற்றே ஒதுக்கி வைத்துள்ளனர்.
 
அதில் மன உளைச்சலுக்கு ஆளான ஜனனி பள்ளியில் மிகுந்த பயத்துடனேயே இருந்து வந்துள்ளார். இதையடுத்து தந்தையை அங்கு வரவழைத்த ஜனனி பள்ளியில் நடக்கும் அவமானங்கள் குறித்து கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் அவரை சமாதானப்படுத்திய தந்தை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஜனனி வி‌ஷம் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜனனி சிகிச்சை பெற்றார்.
 
பின்னர் பள்ளியில் நடந்த ராக்கிங் குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜனனியின் தந்தை பட்டாபி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம் மனு அளித்தார்.
 
அதன்பேரில் நேற்று மாலை பள்ளிக்கு சென்ற திண்டுக்கல் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி, ராக்கிங் செய்ததாக புகார் கூறப்பட்ட 5 மாணவிகள், புகார் அளித்த மாணவி ஜனனி, பள்ளி நிர்வாகத்தினர், ஜனனியின் தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.