வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2017 (09:28 IST)

விரைவில் முதலமைச்சர் பதவியை ஏற்கிறாரா சசிகலா?

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பொங்கலுக்கு முன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
சசிகலா முதல்வர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என பல அதிமுக அமைசர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை போயஸ் கார்டன் சென்ற தம்பிதுரை, அங்கு சசிகலாவை சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசிய போது “ கட்சி பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சி பொறுப்பு ஒருவரிடம் இருப்பது சரியாக இருக்கிறது. இதுதான் உத்தரபிரதேசத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, சசிகலா தமிழக முதல் அமைச்சராக வேண்டும் என, அவரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இதுதான் என் விருப்பம் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் விருப்பம்” எனக் கூறினார். 
 
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பையும், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்த ஓ.பி.எஸ் அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, செல்லூர் ராஜீ உள்ளிட்ட சிலர் சசிகலா போட்டியிட தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து மூத்த அமைசர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சசிகலா தரப்பு தீவிரமான ஆலோனையில்  ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும், அதிமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை முதல் வருகிற 9ம் தேதி வரை போயஸ் கார்டனில் நடக்கிறது.  அதில், அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்ட பின்பு விரைவில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது
 
ஏனெனில், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்குள் சசிகலா முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என மன்னார்குடி தரப்பு கருதுகிறதாம்.  அநேகமாக, பொங்கலுக்கு முன்பு, அதாவது ஜனவரி 10 அல்லது 12ம் தேதி சசிகலா முதல்வர் பதவியை ஏற்க திட்டமிட்டமிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.