வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (10:05 IST)

எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை; சசிகலாவுடன் சந்திப்பு : மன்னார்குடி குடும்பத்தினர் அதிரடி

அதிமுக கட்சியில் நடந்து வரும் பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் முயற்சியில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரன் தனக்கான ஆள் சேர்க்கும் வேலையில் இறங்கினார். அவருக்கு இதுவரை 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்துள்ளனர். ஆனால், தனக்கென ஒரு தனி அணியை அவர் உருவாக்குவதை விரும்பாத சசிகலா, அவரை 60 நாட்கள் அமைதியாக இருக்குமாறு கூறினார். 
 
ஏற்கனவே ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இரு அணிகளும் இணைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதேபோல், சசிகலாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கருத்தின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தினகரன் ஆதரவாளர்களும் மோதிக்கொள்கிறார்கள். மறுபக்கம், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. ஆனால், எதற்கு பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில், ஆகஸ்டு 5ம் தேதிக்கு பின் என் நடவடிக்கைகளை பாருங்கள் என அதிரடி காட்டுகிறார் டிடிவி. தினகரன். 


 

 
அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சசிகலாவிற்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், இப்படியே சென்றால் கட்சி மற்றும் ஆட்சிக்கு பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு விடும் எனக்கருதிய  சசிகலாவின் குடும்பத்தினர், இந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் எனத் தெரிகிறது.
 
அதன் விளைவாக, எடப்பாடி பழனிச்சாமியிடன் பேச்சு வார்த்தை நடத்தி, சில நிபந்தனைகளை வைத்துள்ளதாகவும், அதேபோல் தினகரனிடம் அவர் அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. மேலும், இதுதொடர்பாக ஜூலை முதல் வாரத்தில் சசிகலாவை சந்தித்து அவர்கள் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
எனவே இந்த சந்திப்பிற்கு பின் சில பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் எனவும், அதற்கு பின்னரே தினகரன் மற்றும் எடப்பாடியின் நடவடிக்கைகள் பற்றி தெரியும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.